நாட்டின் ஒரே அரிசி இறக்குமதியாளராக விளங்கும் 'பெர்னாஸ்' நிறுவனத்தின் முற்றுரிமைச் சலுகை, அது காலாவதியாகும் 2031ஆம் ஆண்டிற்கு முன்பாகவே அரசாங்கத்தால் மறுஆய்வு செய்யப்படும் என்று விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் சான் பூங் ஹின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற நெல் மற்றும் அரிசி கட்டுப்பாடு திருத்த மசோதா 2026 மீதான விவாதத்தின் போது அவர் இதனை உறுதிப்படுத்தினார். பெர்னாஸ் நிறுவனம் விவசாயிகளின் நலனுக்காகவும், சமூகக் கடமைகளுக்காகவும் சுமார் 3.2 பில்லியன் ரிங்கிட்டை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி மற்றும் இறக்குமதி வெள்ளை அரிசியைக் கலந்து விற்பனை செய்வதை முறைப்படுத்தவும், 1992ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள அரிசி தரவரிசை முறையை தற்போதைய தேவைக்கு ஏற்ப புதுப்பிக்கவும் இந்தத் திருத்தச் சட்டம் வழிவகை செய்யும் என்று துணை அமைச்சர் மேலும் கூறினார்.








