கோலாலம்பூர், பிப்ரவரி.07-
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜாலான் பேராக் சாலையில் விளம்பரப் பலகை பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, spider lift இயந்திரத்திற்கு அடியில் சிக்கி வங்கதேச ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவமானது நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் முஹமட் ஸம்சூரி முஹமட் இசா தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, இயந்திரமானது சமநிலை தவறி கவிழ்ந்ததில், அதை இயக்கிக் கொண்டிருந்த 32 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர், சாலையோரத்திலிருந்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்த போது, spider lift இயந்திரமானது நடைபாதையின் விளிம்பில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் விளைவாக, இயந்திரமானது சமநிலையை இழந்து அந்த ஆடவர் மீது கவிழ்ந்தோடு அவருக்கு அருகில் இருந்த இரண்டு வாகனங்களையும் நசுக்கியது.
இவ்விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் போலீசார் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.








