பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 12-
கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையில் Online Scam மோசடிகளால் 3.18 பில்லியன் அல்லது 318 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
இதன் வாயிலாக 95 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பலர் புகார் அளிக்காததால் இதன் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இணையம் வழி நடக்கக்கூடிய இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக தங்களின் சொந்த நலனுக்காக அல்லது அரசியல் ஆதாயத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கு இழைக்க தயங்காதவர்களிடமிருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டியுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.
இது போன்ற உயர் தொழில்நுட்பங்களை கொண்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் பொது மக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் நீடித்த ஒத்துழைப்பு அவசியமாகும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.








