கிளந்தான், கோத்தா பாரு, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையப் பகுதியைச் சுற்றி கிளந்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ள மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்குப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த ஊர்வலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் விமானத்தைத் தவறவிட்டால், அதற்கு ஏற்பாட்டாளர்கள் இழப்பீடு வழங்குவார்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த ஊர்வலத்திற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும் அவர் வினவினார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை சம்பந்தப்பட்ட பகுதியில் சாலைத் தடுப்புகளை அமைத்து தீவிர சோதனை நடத்த JPJ மற்றும் போலீசாருக்கு அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பங்கேற்கும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட எவருக்கும் விதிவிலக்கு அளிக்காமல் சோதனையிடவும் JPJ அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.








