கூச்சிங், மே.18-
அண்டை வீட்டுச் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 8 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சரவாக், பெட்ரா ஜெயா பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 12 மற்றும் 8 வயதுடைய இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 69 வயது முதியவர், இன்று கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகளில் தலா 15 ஆண்டுகள் சிறையும் 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்ட நிலையில், இந்தத் தண்டனைகளை அவர் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தண்டனைக் காலத்தின் போது அவர் மறுவாழ்வு மற்றும் ஆலோசனைகளுக்கு உட்பட வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








