அலோர் ஸ்டார், மே.18-
காரில் வைத்து பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் பொறாமை மற்றும் ஒருதலைக் காதல்தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 35 வயதுப் பெண்ணின் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் அளித்த உடனடி முதலுதவியால் அவர் தற்பொழுது நிலையான உடல்நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் அலோர் ஸ்டார் அருகே ஜாலான் தித்தி காஜாவில் உள்ள ஓர் உணவகத்தின் முன்னால் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் பணி புரியும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட திடீர் சண்டையில், அந்த 32 வயது நபர் பெண்ணைக் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காரின் ஹாரனை ஒலிக்கச் செய்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே தனது காதலியைக் கடுமையாகக் காயப்படுத்திய குற்றப் பின்னணி இருப்பதாகக் கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸிலி அபு ஷா தெரிவித்தார். தற்போது சந்தேக நபர் ஏழு நாட்கள் நீதிமன்ற தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.








