கோலாலம்பூர், மே.18-
மலேசியாவின் சிலாங்கூர், காஜாங் பகுதியில் உள்ள ஒரு குளிர்சாதனக் கிடங்கில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத இறைச்சிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓப் தாரிங் சில்லர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் ஒரு மலேசியர் உட்பட நான்கு மியான்மார் நாட்டவர்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு விவகாரத் துறை (JKDNKA) இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி இந்த வெற்றிகரமான நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். கோலாலம்பூர் கால்நடைத் துறை, சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (JAIS) மற்றும் காஜாங் நகராட்சியுடன் இணைந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் விவரித்தார்.
அங்கு சுமார் 167 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பன்றி இறைச்சி, கோழி இறக்கைகள் மற்றும் வாத்து இறைச்சி ஆகியவை முறையான அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மறைமுகமாகச் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத இறைச்சிப் பொருட்களைப் போலி ஹலால் முத்திரைகளுடன் சேமித்து விநியோகம் செய்து வந்துள்ளதோடு, ஹலால் மற்றும் ஹலால் அல்லாத இறைச்சிப் பொருட்களை ஒன்றாகக் கலந்து வைத்திருந்ததும், முறையான உரிமமின்றிச் செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய குற்றச்சாட்டின் படி குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளைக் கண்டறியப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








