இனம் மற்றும் மதம் ஆகிய விவகாரங்களில் மூழ்கி விட்ட மலேசிய அரசில்வாதிகள், அடிப்படை மனித நேயம், மனித உரிமை தொடர்பான விவகாரங்களை துணிச்சலாக பேசுவதிலும், அவற்றை முன்னெடுப்பதிலும் தங்கள் குரல்களை இழந்து விட்டனர் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா ஸ்ரீனிவாசன் சாடினார்.
பேராவில் திருநங்கைகளுக்கு எதிராக Ops Cegah Pondan என்ற பெயரில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைக்கு எதிராக இதுவரை எத்தனை அரசியல்வாதிகள் குரல் எழுப்பியிருக்கிறார்கள் என்று அம்பிகா ஸ்ரீனிவாசம் கேள்வி எழுப்பினார்.
மூன்றாவது பாலினமாக கருதப்படும் திருநங்கைகளை எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து இதுவரை யாரும் குரல் கொடுக்காமல் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது என்று அம்பிகா ஸ்ரீவாசன் குறிப்பிட்ட்டார்.
இனத்தின் மீதும், மதத்தின் மீதும் காட்டுகின்ற அதீத அக்கறையைப் போல் தங்களின் உரிமைக்காக போராடி வரும் திருநங்கைகள் மீதும் காட்டுமாறு அரசியல்வாதிகளை அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.
திருநங்கைகளை மிக மோசமாக விமர்சனம் செய்து, அவர்களுக்கு எதிராக அண்மையில் பேராவில் மேற்கொள்ளப்பட்ட கைது வேட்டையின் மூலம் அமலாக்க அதிகாரிகள், மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளனர் என்று அம்பிகா ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டினார்.
மனித உரிமைக்காக போராடுவதாக கூறி, ஐநாவின் மனித உரிமை மன்றத்தில் இடம் பெற்றுள்ள மலேசியா தனது சொந்த நாட்டிலேயே மூன்றாவது பாலினமாக கருதப்படும் திருநங்கைளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையை தொடங்கி இருப்பது, இதுதான் மனித உரிமைக்கு அது அளிக்கும் மரியாதையா? என்று அம்பிகா கேள்வி எழுப்பினார்.








