அரசு தரப்பு வழக்கறிஞரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், முன்னாள் ராணுவ மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன் தாக்கல் செய்த இறுதி மறுஆய்வு மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று ஒருமனதாகத் தள்ளுபடி செய்யது.
முந்தைய நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குத் தேவையான எவ்வித சட்டப்பூர்வ ஆதாரங்களையும் குணசேரகன் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்று மலாயா தலைமை நீதிபதி ஹாஷிம் ஹம்ஸா தலைமையிலான நீதிபதிகள் குழு தெரிவித்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் பிரதான குற்றவாளிகளான டாக்டர் குணசேகரன், எஸ். நிமலன் மற்றும் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளைக் கடந்த ஆண்டு நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
இதற்கிடையே, தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனுவை டாக்டர் குணசேகரன் திடீரென திரும்பப் பெற்றதை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட அசல் தண்டனை தற்போது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட கெவின் மொராயிஸின் உடல் கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் 16 அன்று சுபாங் ஜெயாவில் சிமெண்ட் நிரப்பப்பட்ட ஒரு பெரிய எண்ணெய் பேரலுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரான நிமலனுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரவிச்சந்திரனுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








