கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறை அமல்படுத்தப்பட்டதையடுத்து, இன்று போக்குவரத்து நிலையானது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநேரங்களில் சில முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டாலும், நிலைமை சாதாரண வேலை நாளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் மாற்றமில்லை என்று நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணி முதலே வாகன எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து மந்தமானதாக இருந்ததாகவும், எனினும் அது கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், காலை 9.20 மணி நிலவரப்படி, வடக்கு – தெற்கு விரைவுச்சாலையின் பல பகுதிகளில் மெதுவான போக்குவரத்து பதிவாகியுள்ளது.
குறிப்பாக சுங்கை பூலோ மருத்துவமனை முதல் புக்கிட் லாஞ்சான் வரையிலும், புத்ரா மக்கோத்தா முதல் கஜாங் வரையிலும், மேலும் சுங்கை பீசி டோல் பிளாசா இருந்து நகர மையம் நோக்கி செல்லும் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.
இந்நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து போக்குவரத்து நிலையை கண்காணித்து வருகின்றனர்.








