குவாந்தான், ஜனவரி.25-
ஓய்வு பெறும் அதிகாரிகளுக்குப் பதிலாகப் புதிய பணியாளர்களை நியமிக்கவும், பொதுச் சேவை விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிச் செய்யவும் இந்த ஆண்டு 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களை நியமிக்கப் பொதுச் சேவை ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு 1.2 மில்லியனாக இருந்த வேலை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஒரு மில்லியனாகக் குறைந்திருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மீண்டும் உயரும் என ஆணையத்தின் தலைவர் அஹ்மாட் ஜைலானி முஹமட் யுசோஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்பிஏ எனப்படும் புதிய பொதுச் சேவை ஊதிய முறையின் கீழ், குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக எஸ்பிஎம் நிர்ணயிக்கப்பட்டதே விண்ணப்பங்கள் குறைந்ததற்குக் காரணம் என்றும், இதனால் பி.எம்.ஆர் தகுதி கொண்டவர்களால் விண்ணப்பிக்க முடியாமல் போனதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். குவாந்தானில் நடைபெற்ற Kembara Kerjaya MADANI நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்களிடையே அரசுப் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய நேர்முகத் தேர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.








