ஷா ஆலாம், ஜூலை.12-
நீதிமன்றத் தீர்ப்புகளில் தலையிட்டதாகக் கூறப்படும் முதிர்நிலை நீதிபதி ஒருவர், நீதித்துறையின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கும்படி பிரதமராலோ அல்லது ஜேஏசி எனப்படும் நீதிபதிகள் நியமன ஆணையத்தினாலோ பரிந்துரைக்கப்படுமானால் அந்த விண்ணப்பத்தை மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் நிராகரிக்க வேண்டும் என்று முதிர்நிலை வழக்கறிஞர் ஹனிஃப் கட்ரி அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நீதிபதியின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகியுள்ள வேளையில், அவரை நீதிபதி தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கும்படி பரிந்துரைக்கப்படுமானால் அத்தகைய விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தனது விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஹனிஃப் கட்ரி கேட்டுக் கொண்டார்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் காரணமாக எந்தவொரு நீதிபதியின் நேர்மை ஐயத்திற்கு இலக்காகி, அவரின் நேர்மை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் அவரை நீதித்துறையின் உயர் பதவிக்கு எவ்வாறு நியமிக்க முடியும் என்று ஹனிஃப் கட்ரி கேள்வி எழுப்பினார்.








