ஜார்ஜ்டவுன், ஜனவரி.21-
பினாங்கு மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கான நில வரியை ஒரு நிலப்பட்டாவிற்கு வெறும் 50 ரிங்கிட் என தரப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் இன்று அறிவித்தார்.
அனைத்துலகப் பள்ளிகளைத் தவிர்த்து, அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான அல்லது பள்ளிகளுக்கே நேரடியாகச் சொந்தமான அனைத்து நிலங்களுக்கும் இந்த 50 வெள்ளி வரி விகிதம் பொருந்தும்.
சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் உட்பட நேரடியாகப் பள்ளிகளுக்குச் சொந்தமான 201 நிலப் பத்திரங்களும் அடங்கும். இதற்கு முன் தெளிவான கொள்கை இல்லாத காரணத்தால், ஒவ்வொரு பள்ளிக்கும் வெவ்வேறு அளவிலான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறைக்கு வரும் இந்த புதிய விகிதம் மாநிலம் முழுவதும் சீரான தன்மையை உறுதிச் செய்யும் என்று சோவ் கோன் யோவ் விளக்கமளித்தார்.
இந்த நடவடிக்கை மாநிலத்திலுள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.








