கடந்த பிப்ரவரி மாதம் வரை, நாடெங்கிலும் மொத்தம் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருவதாக மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நிலம் வழியாக 360 வழிகளும், கடல் மார்க்கமாக 24 வழிகளும் என மொத்தம் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பட்டியலில் கோலாலம்பூர், பினாங்கு, திரங்காணு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, புருனை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் நிலம் மற்றும் கடல் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள மலேசியாவிற்கு, தென் சீனக் கடல் மற்றும் சுலு கடல் பகுதிகளில் சர்வதேச கடல் எல்லைகளும் உள்ளன.
இந்த எல்லைப் பகுதிகள் சட்டபூர்வமான வர்த்தகம் மற்றும் மக்களின் பயணத்திற்கு பயன்படும் வழிகளாக மட்டுமல்லாமல், எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களுக்கு சிலர் பயன்படுத்தும் இடங்களாகவும் மாறிவருவதாக டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.








