அல்-அக்ஸா பள்ளிவாசலை மூட இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் அப்பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதைக் தடுக்கும் அச்செயலானது மிகக் கொடூரமானது என்றும் மலேசியா விமர்சித்துள்ளது.
ஏற்கனவே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பாலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில், புனித ரமலான் மாதத்தில் இக்கொடூர இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள், குறிப்பாக பாலஸ்தீனர்கள், தங்கள் தொழுகைகளை நடத்துவதற்காக இஸ்ரேல் உடனடியாக அல்-அக்ஸா பள்ளிவாசலை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் கட்டாய தொழுகைகள், தராவீஹ் தொழுகை மற்றும் எதிர்வரும் ஹரி ராயா தொழுகைகளையும் அவர்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜெருசலேம்-இன் பழைய நகரமும் அங்குள்ள தொழுகை இடங்களுக்கும் மக்கள் செல்வதை கட்டுப்படுத்துவது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும், ஜெருசலேம்-இன் புனித இடங்களை நிர்வகிக்கும் நீண்டகால ஒப்பந்தங்களுக்கும் எதிரானது என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.








