பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.07-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை முன்னிட்டு, பொது இடங்களில் பேரணி நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும், பதிவு செய்யப்படாத சட்டவிரோத ஆலயங்களுக்கு எதிரான பேரணி திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் என சர்ச்சைக்குரிய சமய பரப்புரையாளர் ஸம்ரி வினோத் அறிவித்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு, சோகோ கோலாலம்பூருக்கு முன்பு நடைபெறவுள்ள அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், சில தரப்பினரின் பிரச்சாரத்தாலும் தந்திரங்களாலும் ஏமாந்து விடாதீர்கள் என்றும், ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடுவோம் என்றும் ஸம்ரி வினோத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டமானது சட்ட விதிகளுக்கு இணங்க நடத்தப்படுவதாகவும், எந்தவொரு குறிப்பிட்ட இனம் அல்லது மதத்துடன் தொடர்பு இல்லை என்றும் ஸம்ரி வினோத் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை, நரேந்திர மோடி மலேசியாவிற்கு வருகை புரிவதை முன்னிட்டு, பொது அமைதியைக் சீர்க் குலைக்கும் வகையில் எவ்வித பொதுக்கூட்டங்களையோ அல்லது போராட்டங்களையோ நடத்த வேண்டாம் என மலேசிய உள்துறை அமைச்சு நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஸம்ரி வினோத் மேற்கண்ட அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.








