அரசாங்கம் நேற்று தொடங்கியுள்ள பாடு எனப்படும் மத்திய முதன்மை தரவுகள் தளத்தில், 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் உசிர் மஹிடின் தகவல் வெளியிட்டுள்ளார்.
PADU இணையப்பக்கத்தை வளம் வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அனைத்துப் பதிவுகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மூன்று மாதங்கள் நீடிக்க இருக்கும் இந்தப் பதிவில், 100 சதவிகிதம் மலேசியர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதே மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும், இணைய வசதிக்கு அப்பாற்பட்டு இருக்கும் புறநகர் பகுதிகளிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யப்படவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் தேசிய புள்ளிவிவரத் துறை பல வழிகளைத் திட்டமிட்டுள்ளது என முஹமாட் உசிர் கூறினார்.
100 விழுக்காடு பதிவு எனும் இலக்கை அடைய, நாடு முழுவதும் 911 இலக்கவியல் பொருளாதார மையங்கள், மாவட்ட, மாநில நிலையிலான 44 புள்ளிவிவரத் துறை அலுவலகங்கள், 27 யூடிசி மையங்கள் ஆகியன தற்போது தீவிரமாகக் களம் இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாடுவில் பதிவு செய்து கொள்ளும் இறுதி நாள் மார்ச் 31 ஆம் தேதி ஆகும்.








