காஜாங், ஜாலான் ரெகோவில் நேற்று போலீஸ் சோதனையை மீறி தப்பிச் சென்ற காரில் இருந்து 2.13 கிராம் சியாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அக்காரில் இருந்த வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் இருந்த ஆடவர் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் போலீசார் மேற்கொண்டிருந்த சோதனைக்கு நிற்காமல் அந்த காரானது செமிஞி நோக்கிச் சென்றதுடன், சில்க் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ஓட்டி விபத்துக்குள்ளானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஜாலான் ரெகோ சந்திப்பில் போலீசார் அக்காரை மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில், அக்காரில் இருந்த பெண்ணிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லாததால் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், போதைப்பொருள் உரிமையாளர் என நம்பப்படும் தப்பியோடிய ஓட்டுநரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








