அதிகார துஷ்பிரயோக விசாரணை தொடர்பாக முன்னாள் ஃபெல்டா தலைமை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று புத்ராஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோலாலம்பூரில் செயல்படுத்தப்படவிருந்த திட்டம் ஒன்றிற்கான மேம்பாட்டாளர் நியமனம் மற்றும் ஃபெல்டாவுக்குச் சொந்தமான நில விற்பனை உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தொடர்ந்து விசாரணை செய்யப்படவுள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட அந்நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வரவழைக்கப்பட்ட நிலையில், 50 வயதுடைய மற்றொரு நபருடன் மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இன்று காலை 9.15 மணியளவில் எஸ்பிஆர்எம் வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
ஃபெல்டா மற்றும் அதன் துணை நிறுவனமான ஃபெல்டா இன்வெஸ்மெண்ட் கார்பரேஷன் தொடர்பாக மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் ஏழு விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளது.
கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் சொத்து கையகப்படுத்தல்களை “ஓப்ஸ் ஃபெல்லா” எனப்படும் சிறப்பு விசாரணை கவனத்தில் கொண்டுள்ளது.
விசாரணையில் சரவாக்கின் லிம்பாங்கைச் சேர்ந்த ஷாரிகாட் தாதாரான் அராஸ், சபா மாநிலத்தின் கிராண்ட் போர்னியோ தங்கும்விடுதி, லண்டனின் கிராண்ட் பிளாஸா செர்விஸ் அபார்ட்மென்ஸ் உள்ளிட்ட சொத்துகள் மற்றும் முதலீடுகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் கோலாலம்பூர் வெர்திகல் சிட்டி திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களும் விசாரணையில் உள்ளன.








