கடந்த மாதம் அமெரிக்க தூதரக கட்டடச் சுவரில் சிவப்பு நிற ஸ்பிரே சாயத்தைப் பயன்படுத்தி "தீவிரவாதி" என்று எழுதியதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட தனியார் நிறுவன பொறியியலாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
மஜிஸ்த்ரெட் வொங் சாய் சியா, 23 வயது அஹ்மாட் ரிட்சுவான் அல் அமின் அஸ்மான் ஷா என்பவருக்கு இந்தத் தண்டனையை விதித்தார், மேலும் அபராதத்தை செலுத்தத் தவறினால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மஜிஸ்த்ரெட் வொங் உத்தரவிட்டார்.
கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக் இல் உள்ள தூதரகத்தின் வடக்குப் பகுதி வெளிப்புறச் சுவரில் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி காலை 5.30 முதல் 5.45 வரை தூதரகத்துக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதன் மூலம் 200 வெள்ளி நட்டத்தை ஏற்படுத்தியதாக அஹ்மாட் ரிட்சுவான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றத்தை மீண்டும் செய்யாமல் இருக்க அஹ்மாட் ரிட்சுவான் க்கு தகுந்த தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் விவியன் யெப் ஜி சி கேட்டுக் கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் முஹமாட் ரஹ்ஸ்டான் வஹாப் தனது கட்சிக்காரர் திருமணமாகாதவர் எனவும் தமது குடும்பத்தை அவர்தான் கவனித்துக் கொள்கிறார் என்பதால், சிறைத்தண்டனை அற்ற குறைந்த அபராதத்தை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
பாலஸ்தீனத்தில் நடந்த சம்பவங்களால் வேதனையடைந்த அஹ்மாட் ரிட்சுவான், தனது தனிப்பட்ட கருத்துக்களை தூதரகத்திற்கு மட்டும் தெரிவிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் எந்த தரப்பினருக்கும் நஷ்டம் ஏற்படுத்துவதற்காக இந்தச் செயலை செய்ய வில்லை எனவும் முஹமாட் ரஹ்ஸ்டான் குறிப்பிட்டார்.








