புத்ராஜெயா, பிப்ரவரி.09-
மத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது உட்பட, நாட்டில் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை அமைச்சு விழாவில் பேசிய பிரதமர், அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொருவருக்கும் மத உரிமையை வழங்குகிறது. ஆனால், அதற்காக எங்கு வேண்டுமானாலும் குறிப்பாக மரத்தடியிலோ அல்லது இதர இடங்களிலோ அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கு முறையான விதிகள் உள்ளன. இந்தியாவிலும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கோயில்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் இடித்து தள்ள ஊராட்சி மற்றும் மாநகர் மன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் சட்டவிரோதக் கோயில்களைத் தாங்களாகவே இடிக்கத் திட்டமிடும் நபர்களைப் பிரதமர் எச்சரித்தார். "அவர்கள் தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை என்பது சட்ட ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். வெறுப்பையும் பகையையும் வளர்ப்பதால் யாருக்கும் லாபமில்லை; இது இஸ்லாமியப் புரிதலையும் மேம்படுத்தாது" என அவர் கூறினார்.
நூறு ஆண்டு காலப் பழமை வாய்ந்த கோயில்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதன் பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம். ஆனால், மரத்தடியில் நீண்ட காலமாக இருக்கிறது என்பதையே காரணமாகக் காட்டி எல்லா இடங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
இந்த அறிவிப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்றாலும், நாடு சட்டத்திற்கு உட்பட்டு இயங்குவதை உறுதிச் செய்ய இந்த நடவடிக்கை அவசியம் எனப் பிரதமர் விளக்கமளித்தார்.








