நாடெங்கிலும் சிறார்களை தெருநாய்கள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க, “சிறார் பாதுகாப்பு சார்ந்த தெருநாய் அபாயப் பகுதிகளை” ஊராட்சி அமைப்புகள் வரைபடமிட வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமின் சிறார் ஆணையர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளிகள், மழலையர் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பிபிஆர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்குச் செல்லும் பாதைகள் மற்றும் தெருநாய்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வரும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் கூட்டமாக சுற்றித்திரியும் ஆக்ரோஷமான நாய்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும், புகார்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் நடைமுறைகளை உருவாக்கவும், குழந்தைகள் மீது விலங்குகள் நடத்தும் தாக்குதல்கள் குறித்த தேசிய அளவிலான தரவுகளை மேம்படுத்தவும் சுஹாகாம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜோகூர் மாநிலம், சுங்கை கெலாம்புவில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி தனது பாட்டி வீட்டருகே 2 வயது சிறுமி 5 தெருநாய்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








