கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் இருந்து சுமார் 1 லட்சத்து 50,000 மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகளை திருடிய 57 வயது நபரை போலீசார் கைது செய்ததுடன், திருடப்பட்ட அனைத்து தங்கக் கட்டிகளையும் மீட்டுள்ளனர்.
இது குறித்து தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே கூறுகையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பில்ஸ் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அந்த உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு 10 மணியளவில் தாமான் ஶ்ரீ அண்டலாஸ் பகுதியில், சந்தேக நபர் வாடகைக்கு எடுத்திருந்த தங்குமிடத்தில் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
28 வயதான நகை விநியோக ஊழியரை தங்கப் பரிவர்த்தனைக்காக அங்கு வரவழைத்த சந்தேக நபர், அவர் கொண்டு வந்த 70 தங்கக் கட்டிகளைச் சோதனைக்காக பெற்றுக் கொண்டார்.
பின்னர், தங்கக் கட்டிகளை ஓர் அறைக்குள் எடுத்துச் சென்ற சந்தேக நபர், வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








