லெங்கோங் தங்கும் விடுதிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு உணவு உட்கொண்ட பின்னர், 12 முதல் 52 வயதுக்குட்பட்ட 159 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லெங்கோங் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அவர்களில் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
உணவு விஷமடைந்ததற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக, பள்ளியில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று தைப்பிங் மருத்துவமனைக்கு வருகை தந்து அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவநேசன், ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே பாதிப்புக்கு காரணமான பாக்டீரியா அல்லது கிருமி குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றார்.
இதனிடையே, நான்கு நாட்களுக்குப் பின்னர் சுகாதார அதிகாரிகள், அப்பள்ளியின் கேன்டீனுக்குச் சென்று அங்குள்ள தூய்மை மற்றும் சுகாதார நிலைமைகளை முழுமையாக ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே சிற்றுண்டி சாலையை மீண்டும் செயல்பட அனுமதிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என டத்தோ சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.








