தேசிய மிருகக்காட்சி சாலையான ஸூ நெகாராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளமானது, தொடர்ந்து பெய்த கனமழையால் உலு கிளாங் பகுதியில் உள்ள சுங்கை பண்டான் மற்றும் சுங்கை கெமென்சா ஆறுகளின் நீர் ஒன்றாகச் சேர்ந்து கரைபுரண்டு ஓடியதால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர், சில பகுதிகளில் 1.2 மீட்டர் உயரம் வரை சென்ற போதிலும், அங்கு எந்த விலங்கும் காயமடையவோ உயிரிழக்கவோ இல்லை என ஸூ நெகாரா துணைத் தலைவர் டத்தோ ரொஸ்லி லானா தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளம் காரணமாக விலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சில பார்வையாளர்கள் கூறிய குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
நீரோட்டம் மிக வேகமாக இருந்ததால் வாகனங்கள் மட்டுமின்றி டிராம்கள் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல முடியவில்லை என அவர் விளக்கமளித்தார்.
குறிப்பாக ஊர்வன, நீர்யானை மற்றும் சவான்னா பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததாகவும், சில விலங்குகளின் இயல்பான நடத்தையே அவற்றைப் பாதுகாப்பாக வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்யானைகள் தண்ணீரில் மூழ்கி இருப்பதை இயல்பாக விரும்புவதால், அவற்றுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் ரொஸ்லி லானா தெரிவித்துள்ளார்.








