நேபாள பேரிடரில் மாயமான 55 மலேசியர்களின் குடும்பத்தினர், அங்கு செயல்படும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயல்பாட்டு மையத்துக்குள் தங்களது பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் அதிகாரிகளுடன் இருவழித் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 55 மலேசியக் குடும்பங்களில் 49 குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசியா - நேபாள பேரிடர் குடும்ப ஆதரவுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில், நேரடி பிரதிநிதித்துவம் கிடைத்தால் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய தகவல்களை குடும்பங்கள் அதிகாரிகளிடம் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அவரது சகோதரி கோமதியும் மாயமானவர்களில் ஒருவர் ஆவர்.
தாங்கள் அதிகாரிகளின் பணியில் தலையிடவும் முயற்சிக்கவில்லை என்றும், வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் இருவழித் தகவல் பகிர்வையே கோருகிறோம் என்றும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சு தினசரி குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், 17 நாட்கள் கடந்த நிலையில், ஊடகங்களுக்கு வெளியிடப்படும் பொதுவான தகவல்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.








