மாறிவரும் குற்றச் செயல்களை எதிர்கொள்ள, கோலாலம்பூர் போலீசார் நவீன தொழில்நுட்பம், தரவுகளைப் பயன்படுத்தும் புத்திசாலித்தனமான அணுகுமுறை மற்றும் சிறந்த குழுப்பணியை கையாள வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகள் தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் பயன்படுத்தி வருவதால், போலீசார் அதைவிட வேகமாக செயல்பட்டு குற்றங்களைத் தடுப்பதில் எப்போதும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் போலீஸ் படையிடம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, கோலாலம்பூரில் உள்ள அனைத்து போலீஸ் துறைகளும் தங்களது பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய மற்றும் சிறந்த வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கோலாலம்பூர் போலீசாரின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய ஃபாடில் மார்சுஸ், “நாம் பெற்ற வெற்றிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்க முடியாது. நமது பலவீனங்களைச் சரிசெய்து, சிறப்பாக செயல்படும் அம்சங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.








