கோலாலம்பூர், ஜனவரி.26-
அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை மலேசிய ரிங்கிட் மதிப்பு வலுவான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது.
இது கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிக வலுவான நிலைக்கு அருகில் உள்ளது. மலேசிய தேசிய வங்கியான பேங்க் நெகாராவின் OPR வட்டி விகிதத்தை மாற்றாமல் நிலைநிறுத்திய முடிவும், அமெரிக்க டாலர் குறியீடு பலவீனமடைந்ததும் இந்த உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ரிங்கிட் மதிப்பு 3 ரிங்கிட் 98 சென்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை இருந்த 4 ரிங்கிட் 4 சென் என்ற நிலையிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
இதற்கு முன்னதாகக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி அன்றுதான் ரிங்கிட் 3 ரிங்கிட் 97 சென் என்ற இதே போன்ற நிலையை எட்டியிருந்தது.
Bank Muamalat Malaysia Bhd, தலைமைப் பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid, கூறுகையில், மலேசியாவின் பொருளாதாரம் குறித்த சாதகமான பார்வை, குறிப்பாக தேசிய வங்கியின் அண்மைய நாணயக் கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு, ரிங்கிட் வலுவடைய ஆதரவாக உள்ளது என்றார்.
பேங்க் நெகாராவின் OPR விகிதத்தை நிலையாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி முதல் இன்று வரையிலான ரிங்கிட்டின் நீண்ட கால சராசரி மதிப்பு 3 ரிங்கிட் 82 சென்னாக இருப்பதால், ரிங்கிட் மேலும் வலுவடைய வாய்ப்புகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.








