கோலாலம்பூர், பிப்ரவரி.24-
தொடக்கப்பள்ளிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான மலேசிய கற்றல் மெட்ரிக்ஸ் முறையானது, மாணவர்களின் எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் அடிப்படை அறிவியல் திறன்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய வல்லதாகும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இந்த மதிப்பீட்டின் மூலம் கிடைக்கும் தரவுகள், 5 மற்றும் 6-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது மாணவர்கள் இடைநிலைக் கல்விக்கு மாறுவதற்கும், அனைத்துலக அளவிலான மதிப்பீடுகளுக்குத் தயாராவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது துணை அமைச்சர் கூறினார்.
மலேசிய கற்றல் மெட்ரிக்ஸ் முறை மதிப்பீடானது, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டும், இடைநிலைப்பள்ளிகளில் படிவம் 3 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டும் தொடங்கும் என்று வோங் கா வோ தெரிவித்தார்
மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களின் உண்மையான நிலையைத் தீர்மானிப்பதே இந்த மதிப்பீட்டின் நோக்கமாகும். மாணவர்களின் தேவைகளை ஆசிரியர்களும் பள்ளிகளும் சிறப்பாகப் புரிந்து கொண்டு, ஆரம்பக் காலத்திலேயே அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க இது உதவும் என்று வோங் கா வோ விளக்கம் அளித்தார்.








