மலேசியாவில் அதிவேகமாகச் செல்லுதல், உரிமமின்றி வாகனங்களை ஓட்டுதல் மற்றும் சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 500 ரிங்கிட்டாக உயர்த்துவதற்கான சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இன்று தொடங்கி ஜூலை 16 வரை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த சாலைப் போக்குவரத்துச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள அதிகபட்ச 300 ரிங்கிட் அபராதம், பயனீட்டாளர்களிடையே போதிய அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்றும், மீண்டும் மீண்டும் நிகழும் விதிமீறல்களைத் தடுத்து சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அனைத்து விதிமீறல்களுக்கும் ஒரேடியாக 500 ரிங்கிட் விதிக்கப்படாது என்றும், குற்றங்களின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப அபராதத் தொகைகள் மாற்றி அமைக்கப்படும் என்றும், அத்தோடு 'மேட் ரெம்பிட்' போன்ற சட்டவிரோத பந்தயக்காரர்களை ஒடுக்கவும் இதில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








