அடுத்த 16 ஆவது பொதுத்தேர்தலுக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் குறைந்தபட்சம் 30 விழுக்காடு பெண் வேட்பாளர்களைக் களம் இறக்குவதைக் கட்டாயமாக்கும் புதிய சட்ட வரைவு மற்றும் குறிப்பாணையைச் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
'புரொஜெக்ட் 30 சதவீதம் என அழைக்கப்படும் இந்த பாலின சமத்துவப் பிரதிநிதித்துவச் சட்ட வரைவு, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின்னிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மலேசிய நாடாளுமன்றத்தில் தற்போது வெறும் 13.5 விழுக்காடு மட்டுமே பெண் பிரதிநிதிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் எம்பி மரியா சின் அப்துல்லா, வெறும் அரசியல் விருப்பங்களை மட்டும் நம்பியிருக்காமல், சட்டப்பூர்வக் கட்டாயத்தின் மூலமாக மட்டுமே பெண்களின் அரசியல் பங்களிப்பை விரைவுபடுத்த முடியும் என்றார்.
இந்தச் சட்டத்தின் கீழ், இலக்கை எட்டும் அரசியல் கட்சிகளுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்குவதுடன், இதனை எட்டாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தனிச்சட்ட வாரியம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.








