மலாக்கா மாநிலச் சட்டமன்றம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் கலைக்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலின் அடிப்படையில், ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு மலாக்கா தேர்தலை எதிர்நோக்கலாம் என்று அவர் கூறினார்.
மலாக்கா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் சட்டமன்றம் கலைக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், அதுவரை மக்களுக்கான சேவை செய்யும் கடமை தொடரும் என்றார்.
இதற்கிடையே, சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், முன்கூட்டியே கலைப்பது குறித்த இறுதி முடிவு முதலமைச்சரின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் மலாக்கா சபாநாயகர் டத்தோ வீரா இப்ராஹிம் துருக் உறுதிப்படுத்தியுள்ளார்.








