இளைய தலைமுறையினரிடையே தலைமைத்துவப் பண்புகளையும் சேவை மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கில், டத்தோஸ்ரீ டாக்டர் ரவி ராஜ்ஜை தலைவராக கொண்ட கிள்ளான் ரோட்டரி கிளப்பை உபரசணை கிளப்பாக கொண்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட அளவிலான 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கம் செமினியில் உள்ள ஆசிய முகாம் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.
நேற்று தொடங்கி, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்களுக்கு நடைபெறும் இந்த தலைமைத்துவ கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 பள்ளிகளில் இருந்து சுமார் 150 மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
ஆசியா கேம்பின் இயற்கை சூழலில் மாணவர்களுக்குத் தலைமைத்துவம், குழுப்பணி, ஆளுமை வளர்ச்சி மற்றும் சமூக சேவை குறித்த பல்வேறு ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
'இன்ட்ராக்ட்' உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்தவும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்தவும் இந்த மூன்று நாள் கருத்தரங்கு ஒரு பாலமாக அமைகிறது என்று ரோட்டரி கிளப்பின், மாவட்டம் 3300, மாவட்ட இன்ட்ராக்ட் தலைவர் ஏ.வி.எம். பிரேம் குமார் விவரித்தார்.
இந்த மூன்று நாள் முகாம், ரோட்டரி கிளப்பின் வருடாந்திர நிகழ்வாகும் என்று விவரித்தார் கிள்ளான் ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் ஆரோன் சாமுவேல்.
ரோட்டரி கிளப் மாணவர்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும் ஆரோன் சாமுவேல் சுட்டிக்காட்டினார்.












