தென் தாய்லாந்தின் யாலா, பட்டாணி மற்றும் நராதிவாட் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, மலேசியா–தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
எல்லை வேலிகள், சுங்கை கோலோக் மற்றும் ஊடுருவலுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய வழித்தடங்களில் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது மலேசிய எல்லை நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தாக்குதல்களில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தேவையற்ற பயணங்களை தென் தாய்லாந்துக்கு தற்காலிகமாக ஒத்திவைத்து, அங்கு பயணிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








