சிரம்பானைச் சுற்றியுள்ள மூன்று இடங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடி சோதனையில், விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 26 இந்தோனேசியப் பெண்கள், 5 வங்காளதேசப் பெண்கள் மற்றும் ஒரு இந்தியப் பெண் உட்பட மொத்தம் 32 வெளிநாட்டுப் பெண்களும் உள்ளனர்.

மேலும், ஏழு உள்ளூர் ஆண்கள் மற்றும் இந்தோனேசியா, வங்காளதேசம், மியான்மார் நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்கரியா ஷாபான் தெரிவித்தார்.
தினசரி அல்லது வார, மாத அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டுப் பெண்கள் தங்க வைக்கப்பட்டு, பாலியல் சேவைகள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு சேவைக்கு 50 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட இந்த நடவடிக்கை சுமார் ஓராண்டாக நடைபெற்று, ஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் வரை லாபம் ஈட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.









