கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தேர்தல் குறித்த வழக்கு அடுத்த வாரம் செவிமெடுப்புக்கு வருகிறது. அந்த வழக்கு டிசம்பர் 22 ஆம் தேதி வரை 2 வாரங்கள் நடைபெறும் என கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முஹமாட் ஹில்மான் இடாம் தெரிவித்தார்.
நீதிபதி அப்துல் வஹாப் முஹமாட் முன்னிலையில், ஈப்போ உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
கடந்த சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் முஹமட் ஹில்மான் இடாம் 58 வாக்குகள் பெரும்பான்மையில் 30,299 வாக்குகள் பெற்று, கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியை வெற்றி கொண்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணியைச் சேர்ந்த மேஆட் சுல்கர்னாயின் ஒமார்டின் 30,241 வாக்குகள் பெற்றிருந்த வேளையில், சுயேட்சையாகப் போட்டியிட்ட முஹமாட் சலிம் முஹமாட் அலி 1,076 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மனு தாக்கல் செய்வது குறித்து தனது கட்சி பரிசீலித்து வருவதாக மெகாட் சுல்கர்னாயின் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்








