கோத்தா கினபாலு, பிப்ரவரி.14
கடந்த வியாழக்கிழமை கோத்தா கினபாலு, இண்டா பெர்மாய் பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் எஞ்சிய இரண்டு உடல் பாகங்களைத் தேடும் பணியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சபா மாநில போலீஸ் துறை ஆணையர் Jauteh Dikun கூறுகையில், மெங்காத்தால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்பெண் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல் துண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், உடல் பாகங்கள் வீசப்பட்ட துல்லியமான இடங்களை அவரிடம் முழுமையாக விசாரணை செய்ய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
"பாதிக்கப்பட்டவரின் எஞ்சிய இரண்டு உடல் பாகங்களையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அரிவாளையும் தேடும் பணி தொடர்கிறது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கொல்லப்பட்ட பெண்ணின் இடது கால் மற்றும் வலது கை இன்னும் கண்டெடுக்கப்படாத நிலையிலும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக அவரது மகள் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார். இந்த கொடூரக் கொலை தொடர்பாக ஒரு தந்தையும் அவரது மகனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








