கோலாலம்பூர் ஜாலான் சுங்கை பெசி பகுதியில் ஆபத்தான முறையில் இரண்டு கார்களை ஓட்டிய சம்பவம் தொடர்பாக ஏமன் நாட்டவர்கள் 7 பேரை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை சுமார் 12.30 மணியளவில் ஜாலான் சுங்கை பெசி-யில் இருந்து ஜாலான் புகித் பிந்தாங் நோக்கிச் சென்ற போது நடந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் ஜம்ஸுரி ஈசா தெரிவித்துள்ளார்.
இரு கார்களிலும் பயணித்தவர்கள், வாகனங்கள் இயக்கத்தில் இருந்த போதே தங்களது உடல்களை காருக்கு வெளியே நீட்டியபடியும், ஜன்னல் சட்டங்களில் ஆபத்தான முறையில் அமர்ந்தபடியும் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் கெடாவிலுள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், மற்ற இருவர் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 336-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை சிறை, 500 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








