மலேசியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மலாய்க்காரர் அல்லாத பிற சமூகத்தினர் ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என தேசிய போலீஸ் படையின் முன்னாள் துணை தலைமை இயக்குநர் அயூப் கான் மைதீன் பிச்சசே தெரிவித்துள்ளார்.
கடந்த 1948 -ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் நீடித்த மலாயா அவசரநிலை காலத்தில், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை கட்டுப்படுத்த மலாக்காரர் அல்லாத போலீஸ் அதிகாரிகள் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பல சீன போலீஸ் அதிகாரிகள் கம்யூனிஸ்ட் குழுக்களுக்குள் ஊடுருவி உளவுத் தகவல்களை சேகரிக்கும் பணியில் உயிரையே தியாகம் செய்ததாகவும் அயூப் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் புக்கிட் அமானின், தீவிரவாதத்திற்கு எதிரான பிரிவில் பணியாற்றிய போது சீன மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இந்தியர்கள் உட்பட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் எந்தவித இன, மத பாகுபாடுமின்றி ஒன்றிணைந்து பணியாற்றியதாகவும் அவர் விவரித்துள்ளார்.
ஆனால் இளம் தலைமுறையினரிடையே இந்த ஒற்றுமை உணர்வு குறைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
மலேசியாவில் அமைதியும் ஒற்றுமையும் தொடர்ந்து நிலைத்திருக்க அவற்றை பாதுகாப்பதுடன், இன மற்றும் மதங்களுக்கிடையிலான இடைவெளியை குறைத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றும் அயூப் கான் வலியுறுத்தியுள்ளார்.








