பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.17-
கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் நான்காம் படிவ மாணவி ஒருவர், இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த மாணவியின் உடலில் கிட்டத்தட்ட 200 கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாக கூறப்படுவது தொடர்பில் தற்போதைக்கு தங்களால் கருத்துரைக்க இயலாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடைபெற்ற சவப் பரிசோதனையில் தனது மகளின் உடலில் கிட்டத்தட்ட 200 கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாக அந்த மாணவியின் தாயார் வோங் லீ பிங் என்பவர் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.
எனினும் சவப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும், அது கிடைத்த பின்னரே அந்த மாணவியின் தாயார் கூறிய தகவலை உறுதிப்படுத்த இயலும் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
பள்ளியில் நிகழ்ந்த இந்த கோரக் கொலை தொடர்பில் இதுவரையில் 127 பேரிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி நல்லுரையாளர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்களில் அடங்குவர் என்று அவர் விளக்கினார்.








