மங்கோலிய பிரஜையான அல்தாந்துயா ஷாரியிபு கொலை வழக்கில், அவரது குடும்பத்தார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுவை விசாரிக்க, பெடரல் நீதிமன்றம் வரும் ஜூலை 15 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.
இந்த விசாரணை தேதியானது, பெடரல் நீதிமன்ற துணை பதிவாளர் வான் நோராசிமின் காசிம் முன்னிலையில் இன்று நடைபெற்ற வழக்கு மேலாண்மை அமர்விற்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்டது.
அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிந்தா-வின் வழக்கறிஞரான ஆபிரகாம் அவ்-வும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த இக்கொலை வழக்கில், அப்துல் ரசாக், இரண்டு முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் மீது தொடரப்பட்ட சிவில் வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீட்டை 5 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1.4 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்த அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அல்தாந்துயாவின் குடும்பம் இந்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி மேல்முறையீட்டு அனுமதி மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








