கோலாலம்பூர், ஜூலை.05-
பன்னாட்டு தமிழ் உறவு மன்றத்தின் உலகளாவியத் தலைவரும், பெரும்புலவருமான, மூத்த அறிஞருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், சென்னை மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டார்.
அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பெருங்கவிக்கோ மறைவுக்கு மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தமது வீரவணக்கதைச் செலுத்தினார். அவருடைய மகன்களான கவிஞர் திருவள்ளுவர், பேராசிரியர் ஆண்டவருடன் தொடர்பு கொண்டு தமது அனுதாபத்தைத் தெரிவித்தார். அவர்- தமிழுக்கும் தமிழருக்கும் நலன் சார்ந்த பல்வேறு பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
50- க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ள- அவர்- 50- ஆண்டு காலமாக, "தமிழ்ப்பணி" எனும் இலக்கிய ஏட்டை நடத்தி வந்துள்ளார். பெருங்கவிக்கோ நீண்டகாலமாக மலேசியத் தமிழர்களுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.








