சண்டகான் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 219 குடும்பங்களை சேர்ந்த 248 பேர் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பி.பி.ஆர். பத்து சாப்பி, எஸ்.கே. கம்பங் காஸ், எஸ்.கே. கம்பங் பகாகியா, எஸ்.எம்.கே. பத்து சாப்பி,சிபுகா ஹால் மற்றும் எஸ்.கே. கரமுண்டிங் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பதிவு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முகாம்களில் தங்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த தீ விபத்தால் மொத்தம் 9,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், கம்பங் பகாகியா பகுதியில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதால், நூற்றுக்கணக்கானோர் ஒரே இரவில் வீடுகளை இழந்து தஞ்சம் இன்றி தவித்து வருகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அவசர குழுக்கள் அனைத்து முகாம்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளன.








