கூலிம் பாடாங் மேஹா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் இன்று அதிகாலை மலேசிய குடிநுழைவுத் துறை, 'ஓப்ஸ் சாப்பு' என்ற நடவடிக்கையின் கீழ், திடீர் சோதனைகளை நடத்தியது.
இரண்டு மாடிகளைக் கொண்ட இரட்டை கட்டிடங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கி இருந்ததுடன், முன்புறம் மளிகைக் கடையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நடவடிக்கையானது, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அதிகாலை 1.20 மணியளவில் சுமார் 30 அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டதாக, கெடா குடிநுழைவுத்துறை செயல்பாட்டுப் பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மேன் எஃபெண்டி தெரிவித்தார்.
மொத்தம் 33 வெளிநாட்டவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், சீனா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 16 பேர் குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் சிக் பகுதியில் உள்ள பெலாந்திக் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட உள்ளனர்.
அவர்கள் அனைவரையும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 (155) – பிரிவு 56(1)(d) -இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.










