செராஸ் பகுதியில் நடந்த சீன நாட்டவர் கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, 36 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
இவர், சூதாட்டக் கடன் தொடர்பான பிரச்சினையால் செராஸ், ஜாலான் பீல் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி விடுதியில் கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து செராஸ் போலீஸ் தலைவர் ரோஸ்டி டாவுட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பருக்காக “உத்தரவாத நபராக” இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நண்பர் சுமார் 1 லட்சம் ரிங்கிட்டிற்கு சூதாட்டக் கடன் வாங்கிய பின்னர் மாயமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அக்கடனை திருப்பிச் செலுத்த வற்புறுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட நபரை மூன்று நாட்கள் ஏர்பிஎன்பி வீடு ஒன்றில் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








