கோலாலம்பூர், ஏப்ரல்.19-
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள தேசிய நூலகத்திற்கு அருகே இன்று மாலை நிகழ்ந்த லாரி - சுற்றுலா வேன் விபத்தில் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 56 வயதுடைய லாரி ஓட்டுநரும், 46 வயதுடைய அவரது உதவியாளரும் அடங்குவர் என கோலாலம்பூர் தீயணைப்பு - மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
சுற்றுலா வேனில் பயணம் செய்த 15 நபர்களில் ஆறு பேர் லேசான காயங்களுக்கு உள்ளான நிலையில், மற்ற ஒன்பது பேர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த அனைவருக்கும் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று மாலை 4.04 மணியளவில் அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதும், தித்திவாங்சா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளும் தீயணைப்புத் துறையினரால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.








