அண்மையில் பினாங்கு, செபெராங் ஜெயாவில் குழந்தைகள் பராமரிப்பு மையமொன்றில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழந்ததற்கு மூச்சுத் திணறலே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட சவப் பரிசோதனை முடிவுகள் அதனைக் காட்டுவதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அஸீஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கும் முன் பல முக்கிய அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த மையத்தின் இரண்டு பெண் ஊழியர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதாக அஸீஸி குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 9 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆண் குழந்தை சுயநினைவு இல்லாத நிலையில் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காது இறுதியில் அக்குழந்தை மரணடைந்தது.








