ஷா ஆலம், செப்டம்பர் 23-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முகப்பிடங்களில் நிலவி வந்த செட்டிங் லஞ்ச ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு விமான நிலையத்திலேயே SPRM கிளை அலுவலகத்தை தோற்றுவிக்கும் பரிந்துரையை பரிசீலனை செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தயாராக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.
விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்களிடம் எவ்வித சோதனை நடத்தப்படாமல் அவர்கள் நேரடியாக நாட்டிற்குள் நுழைவதற்கு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மத்தியில் நிகழ்ந்ததாக கூறப்படும் செட்டிங் முகப்பிட மோசடிகளை தடுப்பதற்கு இந்த யோசனையை பரிசீலிக்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் விமான நிலையத்தில் SPRM அலுவலகம் திறக்கப்படுவதில் ஏற்படக்கூடிய சாதகப் பாதங்களையும் முதலில் தாங்கள் ஆராய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்நிய நாட்டவர்கள், சோதனையின்றி செட்டிங் முகப்பிடகளிள் வாயிலாக மலேசியாவிற்கு நுழையும் சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து மலேசிய குடிநுழைவுத்துறை நடைமுறைகளில் 11 பலவீனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
KLIA ஒன்றிலும், KLIA இரண்டிலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கண்காணிப்பு ம்சங்களில் அதிகமான தளர்வுகள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்ட பலவீனங்களில் அடங்கும் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இதன் காரணமாகவே குடிநுழைவு அதிகாரிகளை ஏஜெண்டுகள் மிக எளிதாக அணுக முடிகிறது. அத்துடன் குடிநுழைவு அதிகாரிகளின் சுழல்முறை பணிச்சுற்றில் முறைப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை இல்லாதது இந்த பலவீனங்களுக்கு மற்றொரு முக்கிய காரணமாகும் என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.








