மலாக்கா , ஜூன் 22-
வரலாற்று சிறப்புமிக்க மலாக்கா மாநிலத்தில் சுற்றுப் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ரிக்ஷா வண்டிகளில் அவற்றின் ஓட்டுநர்கள், தங்கள் சேவைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய வழிகாட்டல் முறை செயல்படுத்தப்படும் என்று அந்த வரலாற்று மாநகரின் டத்தோ பண்டார், டத்தோ ஷதன் ஓத்மான் அறிவித்துள்ளார்.
தற்போது மலாக்கா மாநகரில் 300 பதிவு பெற்ற ரிக்ஷா வண்டி ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்கள், தங்களின் உரிமத்தை புதுப்பிப்பதற்கு முன் மாநகர் மன்றம் நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ரிக்ஷா வண்டிகளுக்கான அவர்களின் உரிமம் வரும் டிசம்பர் மாதத்தில் காலாவதியாகிறது என்று டத்தோ ஷதன் குறிப்பிட்டார்.
ரிக்ஷா ஓட்டுநர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் சுகாதார பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நடைபெறும் நேர்காணலில் பங்கு கொள்ள வேண்டும். மலாக்காவில் உள்ள பிரபல சுற்றுலா இடங்கள் குறித்து நன்கு தெரிந்து வைத்து இருக்க வேண்டும் ஆகியவை அந்த நிபந்தனைகளில் அடங்கும் என்று டத்தோ ஷதன் தெரிவித்தார்.








