கோலாலம்பூர், ஜனவரி.31-
தலைமறைவாக உள்ள 'கேப்டன் பிரபா' திட்டமிட்ட குற்றவியல் கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களையும், அதன் தலைவனையும் தேடும் பணியை அரச மலேசியப் போலீஸ் படையான பிடிஆர்எம் தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் கூறுகையில், "நீங்கள் தப்பி ஓடலாம், ஆனால் எங்களிடமிருந்து என்றென்றும் ஒளிந்து கொள்ள முடியாது. உங்களை நாங்கள் நிச்சயம் கண்டுபிடிப்போம்," என இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ குமார் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தக் கும்பலின் தலைவன் உட்பட சில முக்கிய உறுப்பினர்கள் 'லொரோங் திக்குஸ் ' (lorong tikus) எனப்படும் ரகசியப் பாதைகள் வழியாக அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் போலீசார் நம்புகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவர்கள் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைத் தங்களின் பதுங்கு இடங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். முன்னதாக, 'கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மூவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவையொட்டி, போலீஸ் படை சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. தண்ணீர் பந்தலுக்கு வருகைப் புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ குமார் இந்த விவரத்தை வெளியிட்டார்.
கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அரச மலேசிய போலீஸ் படையின் தண்ணீர் பந்தல் நிகழ்வில் இவ்வாண்டு 88 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்களை வழங்கி வருகின்றனர்.








